“அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவோம்” - காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி!
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி கேக் கொட்டி கொண்டாடப்பட்டது தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழ்நாடு நிலைமையை தலைமையிடம் கூறி உள்ளோம். நிச்சயமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாகவே இந்த கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாக கேட்போம்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொடுத்த வாக்குறுதியை எங்களது தொகுதியில் திமுக நிறைவேற்றி உள்ளது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்தாலும் தவறு செய்தால் தட்டி கேட்போம். தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி கிராம காங்கிரஸ் அமைப்பு என்ற பெயரில் 16000 கமிட்டிகளை அமைத்து வலுமையாக உள்ளோம். அதன் அடிப்படையில் அதிக தொகுதி கேட்பதில் தவறு கிடையாது.
எங்கள் அகில இந்திய கமிட்டியிடம் கூறி இருக்கிறோம். அவர்கள் கேட்டு வாங்குவார்கள். காங்கிரஸ் கடந்த முறை 25 சீட்டுகளை பெற்றோம். இந்த முறை அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கோருவோம். தமிழ்நாட்டில் முழுமையாக மதுகடைகள் மூடப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் ஆன்மீகம் செய்ய வேண்டிய இடத்தில் பாஜகவினர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள்” என்று கூறினார்.