"எதிர்த்து எவர்வரினும் எதிர்கொள்வோம்... 2026-ல் வெல்வோம்" - இபிஎஸ் பதிவு
கோவை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன். இவர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கோவையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடன் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக அர்ஜுனன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது, அவரது வருவாயைக் காட்டிலும் 71.19 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜுனனில் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுக ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாட்டில் நடக்கும் பிரச்னைகளையும், அதனை சரிசெய்ய இயலாத நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை".
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் விளைவுதான் சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை. இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் அர்ஜுனன் திறம்பட செய்து வரும் பணியை தடுக்கும் விதமாக, லஞ்ச ஒழிப்பு துறை சோதனை அமைந்துள்ளது. தீயசக்தி தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும்,எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.