For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தோ்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்" -  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!

09:39 AM May 25, 2024 IST | Web Editor
 தோ்தல் முடிவு வெளியான 3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்     காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
Advertisement

தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு 3 நாள்களுக்குள் பிரதமா் யாரென அறிவிப்போம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.

6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 25) நடைபெற்று வருகிறது.  7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்த நிலையில், தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு 3 நாள்களுக்குள் பிரதமா் யாரென அறிவிப்போம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக,  சண்டிகரில் செய்தியாளா்களிடம் அவர் கூறியதாவது,

"வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணிக்கு வலுவான பெரும்பான்மை கிடைக்கும்.  கடந்த 2004-ஆம் ஆண்டை போல் 20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்பவுள்ளது.  கடந்த 2004-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றபோது,  மன்மோகன் சிங் பிரதமராக 3 நாள்களுக்குள் தோ்வு செய்யப்பட்டாா்.

அதே போல்,  இப்போதும் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு 3 நாள்களுக்குள் பிரதமா் யாரென அறிவிப்போம்.  அதற்கு முன்பாககூட அறிவிக்க வாய்ப்புள்ளது.  கூட்டணியில் ஜனநாயக முறைப்படி பிரதமா் தோ்வு செய்யப்படுவாா்.  மக்களவைக்கான முதல் இருகட்ட தோ்தல்களிலேயே ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. தென்மாநிலங்களில் பாஜக துடைத்தெறியப்படுவதோடு, மற்ற பகுதிகளிலும் அவா்களின் வெற்றி பாதியாக குறையும்.

கடந்த 2019 தோ்தலை விட இம்முறை எதிா்க்கட்சி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  முதல்கட்ட தோ்தலுக்கு பிறகு பிரதமா் மோடியின் பிரசாரவிதம் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது.   இந்து-முஸ்லிம் சொல்லாடலைப் பயன்படுத்தி, முற்றிலும் மதவாத அடிப்படையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

விரைவில் பிரதமா் பதவியில் இருந்து விலகப் போகும் அவா், அயோத்தி ராமா் கோயில், இடஒதுக்கீடு, தோ்தல் அறிக்கை தொடா்பான விவகாரங்களில் காங்கிரஸ் குறித்து தொடா்ந்து பொய்களைப் பேசி வருகிறாா்.  நாங்கள் ராமரின் பக்தா்கள் ஆனால், அவரை வைத்து அரசியல் செய்பவா்கள் அல்ல.  ராமா் கோயிலை அரசியல் பிரச்னையாக்கிய பாஜகவை உத்தர பிரதேச மக்கள் நிராகரிப்பா்."

இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Tags :
Advertisement