"நீட் முறைகேடு தொடர்பான விவாதம் முக்கியம்" - ராகுல் காந்தி பேச்சு
நாடாளுமன்றத்தில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பான விவாதம் முக்கியம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜூன் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார். இதையடுத்து நடைபெற்ற அமர்வுகள், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து , 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது.
கூட்டம் தொடங்கியதும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கல் செய்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக, நீட் முறைகேடு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.
காங்கிரஸ் எம்பிக்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மக்களவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இன்று விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு செய்தி பரப்பப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு நீட் விவகாரம் முக்கியம் என்ற செய்தியை மாணவர்கள் அனுப்ப விரும்புகிறோம். இந்த செய்தியை அனுப்ப நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பில் மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “சில விதிகள் மற்றும் மரபுகளின்படி நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிறகு தான் எந்த விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.