For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வெள்ள நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் எம்பி பேட்டி!

02:01 PM Dec 09, 2023 IST | Web Editor
 வெள்ள நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்    முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் எம்பி பேட்டி
Advertisement

"வெள்ள நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்"  என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி இன்று சந்தித்தார்.  இந்த சந்திப்பில் மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியாக வழங்கினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்ததாவது..

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையிலும் உடனே களத்தில் இறங்கி மக்களுக்காக நிவாரண பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டனர்.  போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  மக்களால் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாத அளவுக்கு பாதிப்பின் தீவிரம் அதிகம்.  நிவாரண பணிக்காக 5
ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில் வழக்கம் போல மத்திய அரசு 450 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.

கடந்த காலங்களை விட இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மீட்பு
பணியும் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது.  இருப்பினும் 47 ஆண்டுகள் இல்லாத தொடர் கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அரசு தனது சக்திக்கு ஏற்ப அனைத்து பணிகளையும் செய்துள்ளது.  வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.  இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறோம்.  அவரது முயற்சியால் பாஜகவை வீழ்த்துவதற்கு 26 கட்சிகளின் கூட்டணியோடு இந்தியா கூட்டணி உருவாகி உள்ளது.  அவரது எண்ணம் ஈடேறும்
வகையில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கடந்த காலங்களில் மக்களவையில் இது மோடி சர்க்கார் அல்ல அதானி சர்க்கார் என்று தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையிலான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினார்.

இதனால் ஆத்திரமுற்ற ஆளும் பாஜக அரசு அவர் மீது விசாரணை நடத்தி
முடிவெடுத்தோம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகளே பங்கேற்காத விசாரணை குழுவில்
ஒரு சார்பாக செயல்பட்டு அவரது பதவியை பறித்துள்ளார்கள்.  இது  ஒரு மோசமான
முன்னுதாரணமாக அமைந்துள்ளது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினரின்
பதவியை தங்களின் அரசியல் காரணங்களுக்காக பறிப்பது சட்டத்தை தவறாக
பயன்படுத்துவதாகும்.  இதற்கு வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

டிசம்பர் 23ஆம் தேதி விசிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வெல்லும்
ஜனநாயகம் மாநாடு டிசம்பர் 29ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்படும்” எனவும் திருமாவளவன் எம்பி  தெரிவித்தார்.

Tags :
Advertisement