“முழுமையாக ஆதரிக்கிறோம், ஆனால்...” - சாதி வாரி கணக்கெடுப்புக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு ராகுல் காந்தி வரவேற்பு!
பிரதமர் மோடி தலைமையில் இன்று(ஏப்.30) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்தாண்டு நடத்தவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு அதிமுக, பாமக, சிபிஐ (எம்), உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றன.
இந்த நிலையில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் வழங்கியதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “நாங்கள் நாடாளுமன்றத்தில் சாதி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று கூறியிருந்தோம். இட ஒதுக்கீட்டுக்கு தடைச் சுவராக உள்ள 50% என்ற உச்ச வரம்பை அகற்றுவோம் என்றும் கூறியிருந்தோம். என்ன நடந்தது என்று தெரியவில்லை. 4 சாதி மட்டுமே இருக்கிறது எனக் மோடி கூறி வந்தார் . ஆனால், திடீரென 11 ஆண்டுகளுக்குப் பிறகு, சாதி கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அதை முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், அதற்கான குறிப்பிட்ட கால அளவையும் அது எப்போது நடக்கும் என்பதும் தெரிய வேண்டும். இது முதல் படிதான். சாதி கணக்கெடுப்பில் தெலுங்கானா முன்மாதிரியாக மாறியுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பை வடிவமைப்பதில் நாங்கள் அரசாங்கத்திற்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம்.
சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் ஒரு புதிய வளர்ச்சியை கொண்டுவருவதே எங்கள் தொலைநோக்கு. இட ஒதுக்கீடு மட்டுமல்ல SC, ST, OBC என எந்த வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் நாட்டில் அவர்களது பங்கு என்ன என்பது கண்டறியப்படும். இன்னொன்றையும் நாங்கள் கூறினினோம். அதை தேர்தல் வாக்குறுதியாகவும் குறிப்பிட்டிருந்தோம். தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பாக உள்ள இடஒதுக்கீட்டு சட்டத்தையும் 15 (5) பாஜக அரசு செயல்படுத்த வேண்டும்”
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.