“நாங்கள் பஞ்சத்தால் திமுகவிற்கு வந்தவர்கள் இல்லை” - அண்ணாமலைக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதில்!
தென்காசி மாவட்ட வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 4,864 பயனாளிகளுக்கு ரூ.4.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று தென்காசி ஐ.சி.ஐ. அரசு பள்ளி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்று பயனாளிகளுக்கு
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிநாடார், ராஜா, சதன் திருமலைக்குமார், ஆகியோர் பங்கேற்றனர். விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான இடங்கள்
குறித்து இன்று ஆய்வு செய்து, மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழக முதல்வர் தென்காசிக்கு வரும் போது பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாங்கள் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்வதற்கு காரணம் எம்ஜிஆருக்கு அடுத்து அதிமுகவில் நல்ல தலைவர்கள் இல்லை என்பதால் தான். திறமையான தலைவரான கருணாநிதி வழியில் நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே வந்தேன். தற்போது ஜெயலலிதாவிற்கு பின்னர் பலர் திமுகவிற்கு வந்து இருக்கிறார்கள். பஞ்சத்தில் திமுகவிற்கு வந்தவர்கள் அல்ல நாங்கள் . திமுகவிற்கு வந்து பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அதிமுக, திமுக என எங்களை பிரிக்க வேண்டாம்.
எங்கள் உடம்பில் ஓடுவது திமுக ரத்தம் தான். தென்காசி மாவட்ட புதிய ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது”. என்று அவர் கூறினார்.