"பாஜகவின் சி டீம் தான் விஜய்" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
புதுக்கோட்டையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் ரகுபதி, அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,
"ஒன்றிணைவோம் தமிழகம் என்பது, திமுகவுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கே முதல்வர் தந்துள்ள சிறந்த திட்டம். ஒவ்வொரு வீடு தோறும் திமுக நிர்வாகிகள் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் இந்த ஆட்சியின் பயன்கள் குறித்து கேட்டறிந்து திட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்ட பின் உறுப்பினராக சேர்க்கிறார்கள்.
ஒவ்வொருவரும் மனம் உகந்து அரசின் பல்வேறு சாதனைகளை உணர்ந்து எங்களையும் திமுகவில் இணைத்துக் கொள்ளுங்கள், நாங்களும் ஸ்டாலினுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்காக பங்காற்ற விரும்புகிறோம் என்று கூறி மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் திட்டமாக இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எந்த ஒரு இயக்கத்திற்கும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதற்கான தைரியம் வேண்டும். ஒரே இடத்தில் இருந்து கொண்டு உறுப்பினர்களை சேர்ப்பது அந்த இயக்கத்திற்கு பலவீனம். எங்களிடம் பலம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி போல இது பலவீனமான திட்டமல்ல. அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகின்ற காரணத்தினால், பரிதாபத்திற்குரிய பழனிச்சாமி எங்கள் திட்டத்தை விமர்சித்து பேட்டியை தந்துள்ளார்.
மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆட்சியோட திட்டங்களே சான்று. அதனை எடப்பாடி பழனிச்சாமியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மகளிர் உரிமைத்தொகையை எடப்பாடி பழனிச்சாமி தர நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருக்கும்போதே கொடுத்திருக்கலாம். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் செய்ய மாட்டார். ஆனால் நாங்கள் சொல்வோம் செய்வோம். எடப்பாடி பழனிச்சாமி நான் தான் முதலமைச்சர் என் தலைமையில் கூட்டணி என்கிறார்.
ஆனால் பாஜக தலைமை பேசி முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். அங்கு முரண்பாடு அவ்வளவு உள்ளது. ஒரு குடும்பத்தில் துக்கம் நிகழ்ந்து விட்டது என்றால் அங்கு வருத்தம் தெரிவிப்பது மனிதாபிமானம், தன்னுடைய கட்சிக்காரர் தவறு செய்தாலும் தண்டனையை தரக்கூடிய முதலமைச்சர்தான் எங்கள் முதலமைச்சர்.
பாஜவின் சி டீம் விஜய் என்று முதன் முதலில் நான் தான் சொன்னேன். இப்போதும் நான் அதைத்தான் சொல்கிறேன். பாஜகவின் சி டீம் தான் விஜய், அவர்களைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை. ஒன்றிணைவோம் தமிழ்நாடு திட்டத்திற்கு அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்துள்ளதால் பொதுமக்களே நாங்கள் வீடுகள் தேவை செல்லும் போது திமுகவில் இணைந்து கொள்கிறோம் என்று கூறி அவர்களாலே திமுகவில் இணைந்து கொள்கின்றனர். 2026 மட்டுமல்ல 2031 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும்.
திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே பாஜக பின்னணியில் இருந்து ஆரம்பிக்கப்பட இயக்கம்தான் தமிழக வெற்றி கழகம். பாஜகவோடு மறைமுக கூட்டணி வைக்கக்கூடிய அவசியம் திமுகவிற்கு இல்லை. ஏற்கனவே பாஜக, அதிமுக உடைய கூட்டணி என்று கூறிவிட்டது அதன் பின்னர் ஏன் நாங்கள் அதில் மூக்கை நுழைக்க வேண்டும். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. வெற்றிக் கூட்டணி 26ல் ஆட்சியைப் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார். .