உசிலம்பட்டி காவலர் படுகொலை சம்பவம் - குற்றவாளி போலீசாரால் சுட்டுபிடிப்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம்( மார்ச்.27) இவர் நாவார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்த பொன்வண்ணன் என்பவருக்கு அறிவுரை வழங்கியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலின் போது உடனிருந்த காவலரின் உறவினரான ராஜாராம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து நேற்று குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க கோரியும், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவலரின் உடல் வைக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே உடற்கூறாய்வு முடிந்த காவலரின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், பார்வட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கதிரவன், பார்வட் ப்ளாக் தலைவர் முருகன் ஜீ தலைமையிலான நிர்வாகிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொன்வண்ணனை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்வண்ணனை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.