பால் டேங்கர் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - உ.பியில் 18 பேர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேசத்தில் பால் டேங்கர் மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள லக்னோ விரைவுச் சாலையில், பீகாரில் இருந்து டெல்லி சென்றுக் கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து முன்னால் சென்ற பால் டேங்கர் லாரியை முந்த முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்துள்ளது.
இதில் பேருந்து நசுங்கி அதிலிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர் மேலும் 19 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.