மதுரையில் காவல் நிலையத்தை சூறையாடிய இரண்டு பேர் கைது!
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு காவலர் பால்பாண்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவு அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் அய்யனார் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து தன் தந்தையை எப்படி
விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம்? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென கட்டையால் காவலரை தாக்கி அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள கணினி உள்பட பல பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதன் பின் அவ்வழியாக சென்ற ஒருவரை பால்பாண்டி உதவிக்காக அழைத்த நிலையில் ஜன்னல் வழியாக நடந்ததை கூறி கதவினை திறக்கச் செய்தார்.
இதன்பின் மாவட்ட எஸ்.பி. அரவிந்த் நேரில் வந்து ஆய்வு செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வைத்தனர். விசாரணையில் பிரபாகரன் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் இருப்பதுடன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது தந்தையை திண்டுக்கல் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதை தவறாக புரிந்து கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் அய்யனார் இருவரையும் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி சோதனை சாவடியில் போலீசார் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மதுரை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.