கல்குவாரி குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!
சென்னை தாம்பரம், புலிகொரடு பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவர்கள் தினேஷ்(15) மற்றும் சிவராஜ்(14). இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் உள்ள கல்குட்டையில் தனது நண்பர்கள் உட்பட ஐந்து பேர் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது தினேஷ் மற்றும் சிவராஜ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்க்கியுள்ளனர். இதனை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த மாணவர்கள் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.