For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழ்நாடு எம்.பி.க்கள்!

04:15 PM Jan 13, 2024 IST | Web Editor
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழ்நாடு எம் பி க்கள்
Advertisement

வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

வரலாறு காணாத கனமழை காரணமாக தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் அரசு வழங்கியது. 

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தபோது நேரடியாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், ஜனவரி 13-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதன்படி, இன்று (ஜன. 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்தித்தனர்.  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, சி.பி.ஐ நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சி.பி.எம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கொங்கு நாடு மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகிய 8 பேர் சந்தித்தனர்.

வெள்ள பாதிப்புகளுக்கான மொத்தமாக ரூ.39,000 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் அவர்கள் நேரில் வலியுறுத்தினர்.  சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.19,692 கோடி உடனே வழங்க வேண்டும் எனவும் எம்பிக்கள் குழு வலியுறுத்தியது.

Tags :
Advertisement