“பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம்” - பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்!
ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
“திருப்பூர் மண்ணுக்கு தேசிய உணர்வு அதிகம். அனைவர் கையிலும் தேசியக் கொடி இருந்தது. மாவீரன் கொடிகாத்த குமரன் பிறந்த மண் அல்லவா. இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டவே பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மாமன், மச்சான் போல் உள்ள இந்தியாவில் பகைமையை ஏற்படுத்தவே தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டு பெண்களை அனுப்பி பாகிஸ்தானை நடுங்க வைத்தவர் மோடி. அன்புக்கு அன்பு. ரத்தத்திற்கு ரத்தம். பழிக்கு பழி என காட்டி விட்டார் மோடி. எந்த நாடும் சிறு கண்டனம் தெரிவிக்காததன் காரணம் மோடி. பிரதமர் மோடி நாடு நாடாக சுற்றியதன் விளைவே நமக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்தன.
நம்முடைய நாட்டில் எல்லோர்க்கும் தேச பக்தி உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட கதையாக பேசுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாமே. இதை பற்றிப் பேசினால் புதிய பாஜக தலைவர் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேசுகின்றனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக தினமும் விவாதம் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்துக்கள் பரப்பப்படுகிறது. தமிழக முதலவர் இதனை கண்டிக்க வேண்டும். கண்டிக்க தவறும் பட்சத்தில் அவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு என்று தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும். வாஜ்பாய் சொன்னார் இந்தியாவில் ஒரு பகுதி போனால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என; அதனை மோடி செய்ய உள்ளார்” என தெரிவித்தார்.
இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு என்ற பாடலை பாடி பேச்சை நிறைவு செய்தார்.