திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - அனைத்து தரப்பினரும் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
மதுரையைச் சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய
மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில்
உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்த
கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும்,
இதேபோல திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டிருந்ததும் வருத்தமளித்தது. எனவே சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதித்து, திருப்பரங்குன்ற மலையை சமணர் குன்று மலை என அறிவிக்கக்கூடிய மனு,
இதேபோல சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற மனுவும், சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு
செய்யக்கூடாது எனவும், நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என உத்தரவிடக் கூடிய மனு என அனைத்தும் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது தொல்லியல் துறை தரப்பில், “திருப்பரங்குன்றம் மலையின் பரப்புகளை அளவிடுவது தொடர்பாக ஆட்சியரிடம் அனுமதி கோரிய நிலையில், அனுமதி இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், “அனைத்து தரப்பினரும் பதில் மனுவைத் தாக்கல்
செய்யவும், வழக்கை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் ட்ரோன் மூலம் அளவீடு செய்வதற்கு அனுமதி வழங்குவது குறித்தும் முடிவு செய்து கொள்ளலாம்” எனவும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.