“40 தொகுதிகளிலும் கருணாநிதி தான் வேட்பாளர் என பணியாற்ற வேண்டும்” - அமைச்சர் உதயநிதி பேச்சு!
40 தொகுதியிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுகவின் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
“எப்படியாவது திமுக மீது சேற்றை வாரி வீச எதிரி கூட்டம் முயற்சி செய்கிறது. அது வேலைக்கு ஆகாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று நான் பேசியதை, திரித்து கூறி தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் எதையும் தவறாக பேசவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசியதை தான் நான் பேசி உள்ளேன். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது. நல்ல தீர்ப்பு வரும்.சமூக வலைதள அணியை சேர்ந்தவர்கள் வேகமாக செயல்பட வேண்டும். திமுக மீது அவதூறு பரப்புபவர்கள் மீது உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும். புதிய நாடாளுமன்றம் திறக்க சாமியார்கள் போனார்கள். ஆனால் பழங்குடியினரான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அனுமதிக்கப்படவில்லை. அயோத்தி கோயிலை திறக்க சாமியார்கள் போயிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் போயிருக்கிறார். பிரதமர் போனதால் சாமியார்கள் போகவில்லை. மதத்தை அரசியலாகவும், அரசியலை மதமாகவும் பார்க்கிறார்கள்.
சென்ற முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகளை விட 1% வாக்கு இம்முறை குறைந்தாலும் , மக்களிடம் திமுகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக சொல்வார்கள். 40 தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும். 7 அல்லது 8 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உடை என்று மாற்ற பாஜக நினைக்கிறார்கள். 10 ஆண்டு ஆட்சியில் அதிமுகவினர் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டார்கள். வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி திமுக-வை அடக்க பார்க்கிறார்கள். நாங்கள் அடங்க மாட்டோம். மத்திய அரசின் அடக்குமுறைக்கு திமுக குடும்பத்தில் உள்ள கைக்குழந்தை கூட பயப்படாது. திமுகவிற்கு சுயமரியாதை மிக மிக முக்கியம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை நினைக்கிறாரோ அவரே மத்தியில் பிரதமராக வேண்டும் என்றால் 40 தொகுதியையும் வென்றாக வேண்டும். 2021 தேர்தலில் அதிமுகவினரை விரட்டினோம். 2024 தேர்தலில் அவர்களின் எஜமானர்களை விரட்ட வேண்டும்”
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.