“எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை” - எல்.முருகனின் குற்றச்சாட்டுக்கு நீலகிரி மாவட்ட கல்வித்துறை மறுப்பு!
நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடவுள்ளதாக பாஜக மூத்த தலைவரும், இணையமைச்சருமான எல்.முருகன் பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்தார். இந்நிலையில் எந்தவொரு பள்ளியையும் அரசு மூடவில்லை என நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“நீலகிரி மாவட்டத்தில் 287 அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சியாக, 7 பிப்ரவரி 2025 அன்று, மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பள்ளிகளின் வருகைப்பதிவை மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தின் பள்ளிகளில் ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.