“அமித் ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டமில்லை” - நயினார் நாகேந்திரன்!
மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்காக கால்கோல் விழா நடைபெற்றது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள மைதானத்தில் ஜூன் 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிகழ்விற்கான கால்கோல் விழா பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கால்கோல் விழாவை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“இரண்டு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். அமித் ஷா மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகளை சந்திக்கிறார். அமித்ஷா, அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை. சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ராமதாஸ், அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை.
குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார்.
அவர் ஒரு நலவிரும்பி. திமுக பொதுக்குழுவுக்கு போட்டியாக பாஜக மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உண்டு” என தெரிவித்தார்.