அருள் வந்து ஆடிய நபருக்கு நேர்ந்த துயரம்... சோகத்தில் முடிந்த திருவிழா கொண்டாட்டம்!
ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது கங்கை, காவம்மா உள்ளிட்ட அம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருப்பதி மாவட்டம் வெங்கடகிரியில் உள்ள காவம்மா கோயிலில் திருவிழா நடந்தது. இதன்காரணமாக ஊரே விழாக்கோலம் பூண்டது. உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பலர் கோயிலில் குவிந்தனர்.
இதையும் படியுங்கள் : குபேரா இசை வெளியீட்டு விழா… ‘வடசென்னை 2’ அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
தொடர்ந்து, திருவிழாவையொட்டி இக்கோயிலில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதே ஊரை சேர்ந்த சோபன் பாபு என்பவர் அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் செயலில் ஈடுபட்டார். அப்போது சோபன் பாபு அருள் வந்து ஆடியதாக கூறப்படுகிறது. ஆடிக்கொண்டிருந்து சோபன் பாபு திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோபன் பாபு மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கோயில் திருவிழாவில் அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் செயலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்த சம்பவம் வெங்கடாகிரியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.