"திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெறும்" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி கோவில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து அறநிலை துறை கோவில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,
"சுவாமி கோவிலில் குடமுழுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். இரவு ஆய்வு மேற்கொண்டதற்கு காரணம் கோவிலில் நடைபெறுகின்ற கட்டுமான பணிகள், பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற கூடுதல் வசதிகளை கூட்டம் இல்லாத போது ஆய்வு
செய்தால் தான் முழு அளவிளே விபரங்கள் தெரிய வரும் என்பதால் கூட்டம் இல்லாத நேரமான நேற்று இரவு முழுதும் ஆய்வு செய்தோம் என்றார்.
மேலும் பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் தரிசன வரிசை, பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் 20 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தக் கூடிய அளவுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறுபடை வீடுகளை ஒன்றாக பிரதிஷ்டை செய்து அந்த அறுபடை வீடுகளையும் தரிசித்து செல்லுகின்ற வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூலை 7 ம் தேதி நடக்கின்ற குடமுழுக்கில் லட்ச கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில பணிகள் மட்டுமே குடமுழுக்கிற்கு முன்னதாக முடிக்கப்படும் என்றும் சில பணிகள் குடமுழுக்கு நடைபெற்ற பின் முடிக்க முடியும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி நாழி கிணறு போன்ற பணிகளை விரைவு படுத்தி உள்ளோம்.
அந்த பணிகள் அனைத்தும் குடமுழுகிற்கு முன்பாக முடிக்கபடும் என்றும் மீதம் உள்ள பணிகள் அது குடமுழுக்கு பின்பு முடிக்கப்படும் என்றார். இந்த திருப்பணி சீறோடும் சிறப்போடும் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.