“ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம்!” - அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந் தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக அவரே நீதிமன்றத்தில் சில வாதங்களை முன்வைத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் வாதத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- ஆம் ஆத்மி கட்சி மீது நாடு முழுவதும் களங்கம் சுமத்த முயற்சி நடக்கிறது
- மதுபான கொள்கை வழக்கில் எனக்கு எதிராக 4 சாட்சிகளை அமலாக்கத்துறை முன் வைத்துள்ளது. ஒரு முதலமைச்சரை கைது செய்ய இந்த சாட்சிகள் போதுமானதா?
- ரூ.100 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஊழல் செய்து பெற்றதாக கூறப்படும் பணத்திற்கான ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- நான் கைது செய்யப்பட்டதின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது. இதில் அமலாக்கத்துறைக்கு ஆதரவாக சாட்சி சொல்ல பலர் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
- இந்த வழக்கு 2 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், 2022-ல் சிபிஐ வழக்கு தாக்கல் செய்த நிலையில், அமலாக்கத்துறை தற்போதுதான் இவ்வழக்கை கையில் எடுத்துள்ளது.
- மதுபான கொள்கையில் சம்பாதித்த பணம் எங்கே? அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய ரூ.100 பணம் இல்லையே? உண்மையான மதுபான கொள்கை முறைகேடு ஊழல் அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னரே தொடங்கியுள்ளது.
- நீங்கள் விரும்பும் வரை என்னை காவலில் வைத்திருக்கலாம். விசாரணைக்கு நான் தயார்.
- இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள சரத் ரெட்டி பாஜகவுக்கு ரூ.55 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார். இந்த மோசடியில் பணம் கைமாறிய ஆதாரம் என்னிடம் உள்ளது. கைது செய்யப்பட்ட பின் அவர் பாஜகவுக்கு ரூ.50 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
- இந்த வழக்கில் சிபிஐ 31 ஆயிரம் பக்கங்களுக்கும், அமலாக்கத்துறை 25 ஆயிரம் பக்கங்களுக்கும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் நான் கைதும் செய்யப்பட்டிருக்கிறேன். ஆனால் எந்த நீதிமன்றத்திலும் என்னை குற்றவாளி என நிரூபிக்கவில்லை.
- இறுதியாக அமலாக்கத்துறையின் நோக்கம் ஆம் ஆத்மியை நசுக்குவதே என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.