"தமிழ்நாட்டு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்" - கனிமொழி எம்.பி. பதிலடி!
சென்னையில் நேற்று (மார்ச் 22) மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம், நீங்கள் என்ன கொடுக்குறீர்கள் என்ற வாதமே தவறு. கோயம்புத்தூரும் சென்னையும்தான் தமிழ்நாட்டுக்கு வரி கொடுகிறது. அரியலூர், கோவில்பட்டியில் இருக்கிறவர்கள் எங்களுக்கு என்ன செலவு செய்கிறீர்கள் என்று கேட்பார்கள்.
இதற்கு கோயம்புத்தூர்காரர்களும் சென்னைகாரர்களும் நாங்கதான் வரி கொடுக்கிறோம், எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்கனும்னு, கோவில்பட்டி எப்படி போனால் எனக்கு என்ன? நீங்கள் செலவு செய்யாதீர்கள் என்று சொல்வார்கள். நம் நாட்டில் அது போன்ற பாலிசி இல்லை. அதனால் இவ்வாறு குதர்க்கமாக பேசக் கூடியவர்களுக்கு நான் சொல்கிறேன். இதெல்லாம் வைத்துதான் தமிழ்நாட்டுக்கு என்ன வந்துக்கொண்டு இருக்கிறது என சொல்கிறோம்.
தமிழ்நாட்டில் செய்வதற்கு இன்னும் எத்தனையோ இருக்கிறது என்றாலும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என நம்மை திசை திருப்புகிற முயற்சிகள் நிறைய நடைபெறுகின்றன" என்றார். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி பதிலளித்துள்ளார்.
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் @nsitharaman அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது… pic.twitter.com/ZC8wHu3Cvd
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 22, 2025
இது தொடர்பாக கனிமொழி கருணாநிதி எம்.பி. எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!"
இவ்வாறு திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.