"3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி" - அண்ணாமலை!
இந்தியாவிலேயே முதல்முறையாக 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் என்பது
தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என முன்கூட்டியே தெரிந்து நடைபெறும்
தேர்தல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த 10-ம் தேதி கிருஷ்ணகிரி
மாவட்டம் ஊத்தங்கரையில் துவங்கினார். பின்னர் மாவட்டத்தில் உள்ள பர்கூர்,
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, தளி மற்றும் ஓசூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில்
2 நாட்களாக பிரச்சார பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 150-வது சட்டமன்றத் தொகுதியில்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது நடை பயணத்தை மேற்கொண்டார். பாகலூர் சாலை, ராமர் கோவில் சாலை வழியாக பழைய பெங்களூர் சாலை ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே மக்களை சந்தித்தார்.
பின்னர், ராம் நகர், அண்ணா சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட
மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று, இந்தியாவில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை முன்னெடுத்து சாதனைகளை நிகழ்த்தியதில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளது. இவ்வாறான சூழலில் 1952-ம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்றத்திற்கு எவ்வளவோ தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்: “சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி
ஆனால் இந்தியாவிலேயே முதல்முறையாக 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் என்பது election of certainity எனப்படும். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்து நடத்தப்படக்கூடிய தேர்தல் ஆகும்.
இதில், நடைபெறும் அரசியல் கள விவாதம் முழுவதும், 350-க்கு அதிகமாகவா?, 450
க்கு அதிகமாகவா? என்ற எண்ணிக்கை குறித்து தான் நடைபெற்று வருகிறது. எனவே
3-வது முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆவது உறுதி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.