ஓட்டுக்கு காசு கொடுப்பவன் திருடன் - சீமான் ஆவேசம்!
காசை திருட வந்தவன் மட்டும் திருடன் அல்ல ஓட்டுக்கு காசு கொடுக்க வந்தவுனும் திருடன் தான் என சீமான் தெரிவித்தார்.
18வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் ஆதரித்து நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர்:
மற்றவர்களுக்கு தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது . நமக்கு போர் நடந்து கொண்டிருக்கிறது. மக்களோடு மக்களுக்காக நின்று, மக்களை நம்பி நிற்கும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி. நம்மை மறைப்பார்கள், இது ஒன்றும் புதிதில்லை. நம்மை நிராகரிப்பார்கள், நசுக்குவார்கள், ஒடுக்குவார்கள், அடக்குவார்கள் இது இதுவும் புதிதில்லை. தமிழர் நாகரீகம் என்று சொல்ல ஒருத்தருக்கும் துணிவில்லை.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஒரு நாளில் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள் என அம்பேத்கர் கூறுகிறார். தமிழ் பேரினம் தங்கள் இனத்திற்கான வரலாற்றை எழுதுவதற்கான புரட்சி இந்த நிலத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் நம் முன்னோர்கள் தொடங்கினார்கள். அன்று கொளுத்து பெருத்திருந்த திராவிட இயக்கங்கள் தின்று ஏப்பம் விட்டது.
உங்கள் கோட்பாடு சாதி, மதம், சாராயம், சாப்பாடு இதைத் தவிர இந்த கட்சிகளுக்கு வேறு ஏதேனும் கோட்பாடு உண்டா? நலத்திட்டம்,சலுகை, போனஸ், மானியம், இலவசம் இதை தவிர ஒன்றும் கிடையாது. பாஜக கலவரத்திலேயே பிறந்து, கலவரத்திலேயே கட்சி வளர்த்து, கலவரத்திலேயே வளர்ந்தவர்கள், கலவரம் இல்லை என்றால் அவர்கள் நிலவரம் சரியாக இருக்காது. படுத்துவிடுவார்கள்.
இந்துவை நிறுத்தினால் இஸ்லாம் ஓட்டு போட மாட்டாய். இஸ்லாமை நிறுத்தினால் இந்து ஓட்டு போட மாட்டாய், இருவரையும் நிறுத்தினால் கிறிஸ்தவர் ஓட்டு போட மாட்டாய். பிறகு எப்படி தமிழ் தேசியத்திற்கு அரசியல் அதிகாரம் வரும்? அதிகாரம் அற்ற அடிமையாக தன்னிடத்தில் நின்று கொண்டிருக்கிறாய்.
சாதிக்கு ரத்த வெறி இருக்கிறது. ரத்தத்துக்கு சாதிவெறி கிடையாது. இன்னும் சாதி பார்த்து மதம் பார்த்து ஓட்டு போடுவது என்றால் செத்துப் போங்கள். இந்த தேர்தலில் நீங்கள் மொழி இனமாக நிற்கப் போகிறீர்களா அல்லது சாதி மதமாக நின்று தேர்தலை எதிர்கொள்ளப் போகிறீர்களா? சாதிதான் மதம்தான் என்றால் எங்களை மறந்து விடுங்கள். ஒரு ஓட்டு கூட எங்களுக்கு போட்டு விடாதீர்கள்.
காசை திருட வந்தவன் மட்டும் திருடன் அல்ல ஓட்டுக்கு காசு கொடுக்க வந்தவுடன் திருடன் தான். எப்போது விரட்டி விரட்டி அடிக்கிறாயோ அப்போதுதான் இந்நாட்டுக்கு விடிவு வரும். 500 ரூபாய் கொடுத்துவிட்டு 500 கோடி கொள்ளை அடிப்பார்கள்.
துரோபதி மர்ம பழங்குடியின மகள், அத்வானியும் மோடியும் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார்கள் அந்த மகள் கைகட்டி நிற்கிறார்கள். இதுதான் அவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை. இதுதான் அவர்களின் சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம்.
இந்தியை திணித்தார்கள் எதிர்த்தோம். இன்று இந்திக்காரர்களை திணிக்கிறார்கள். இந்திக்காரன் வந்தால் என்ன ஆகும் அவனுக்கு ஓட்டுரிமை கொடுப்பாய் இந்த இடத்தில் அரசியல் அதிகாரத்தை தீர்மானிப்பான் அவனுக்கு அடிமையாகி ஹிந்தி பேசும் இன்னொரு மாநிலமாக மாறும். நீ நிலம் இல்லாமல் தவித்து ஓடுவாய்.
இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்து இலவசமாக ரேஷனில் அரிசி போட்டால் அதை வாங்கி தின்று வயிறு வளர்க்க முடியும் என்றால் ஏழ்மை வறுமை நிலையில் மக்களை வைத்ததை தவிர உங்கள் சாதனை என்ன?
உதயநிதி, கனிமொழி,,ஸ்டாலின் நாங்கள் வந்தால் மதுக்கடையை மூடுவோம் என கூறினர். இந்தியாவில் அதிகமாக விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். வந்த பிறகு ஏன் மூடவில்லை. இப்போது விதவைகள் எண்ணிக்கை குறைந்து விட்டதா?
இவ்வாறு சிமான் கூறியுள்ளார்.