பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் தவறானது - என் ரதத்தில் ஊறியது அதிமுக - முன்னாள் எம்.பி. பார்த்திபன் பேட்டி
பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் தவறானது ; என் ரதத்தில் ஊறியது அதிமுக என முன்னாள் எம்.பி. பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. இதை அடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறி தேனி விரைந்தார்.
பின்னர் கண்டமனூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பார்த்தீபனை இடை மறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவரை தனது காரில் உசிலம்பட்டியில் நடைபெற்ற முடிந்திருந்த கூட்டத்திற்கு அழைத்து வந்தார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பார்த்திபன், “கடமலைகுண்டு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த போது ஆர்.பி.உதயகுமார் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் சந்தித்தோம். தேனியில் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தவில்லை நான் பாஜகவில் இணைய உள்ளேன் என வெளியாகும் செய்தி யாரோ வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட தவறான தகவல். மாற்றுக் கட்சியில் இணையும் சிந்தனைக்கே இடமில்லை. அதிமுக எனது ரதத்தில் ஊறிய கட்சி என பேட்டியளித்தார்.