"வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது" - மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி!
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜையை ஒட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக, பாஜகவினர் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "சுதந்திரப் போராட்ட வீரர்கள் 268 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கௌரவப் படுத்தி வருகிறார். தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவில் கௌரவம் செய்யவே திருநெல்வேலிக்கு வருகை தந்தேன்.
பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை, காவி என்பது மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல அது பற்றற்ற தன்மையை குறிக்கும் நிறம். அறநிலை துறை அமைச்சர் கூட காவி அணிந்துதான் கோவிலுக்கு செல்கிறார். மாநில முதலமைச்சர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளது அதனை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் அவர்கள் தலையிடக்கூடாது.
மாநிலத்தில் முதல் பிரஜையாக செயல்படுபவர் ஆளுநர் தான். நான் நான்கு மாநிலங்களில் ஆளுநராக இருந்திருக்கிறேன், இரண்டு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான். ஆனால் அங்கு இது போன்ற எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படவில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் ஆளுநரிடமே உள்ளது கேரளா அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அதிகாரம் என இவர்கள் கூறி வருகின்றனர்.
மாநில ஆளுநர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது. ஆளுநர் பதவி என்பது நியமன பதவி தானே முதல்வர் தான் மக்களால் தேர்ந்தெடுக்கபடுகிறார் என்ற கேள்விக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதலமைச்சருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா? பிரதமருக்கு முழு அதிகாரம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா. அப்படி என்றால் எதேச்சி அதிகாரமாக அவர் செயல்பட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் கோட்சே வழியில் செயல்படக் கூடாது என முதலமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு, வன்முறைக்குள் மாணவர்கள் செல்லக்கூடாது. ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதலமைச்சர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது. வன்முறை பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் குரல் கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.