"மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஏற்படுகிறது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம் காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.
செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில், நீதிபதி கூறியிருப்பதாவது,
”மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது. கால வரம்பின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு குறிப்பட்டதை போல் ஆளுநருக்கு 4-வது தெரிவு கிடையாது, 3 தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் விளக்கத்துடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது.
மசோதவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை எங்களால் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் இயக்கும் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும். ஆளுநர்கள் மாநில அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது. ஒரு மசோதா சட்டமாக மாறும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும்.
ஜனநாயக நாட்டில், ஆளுநர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது”
இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.