“பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” - அமைச்சர் கே.என். நேரு!
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து
பஞ்சப்பூர் கலைஞர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் வரை புதிதாக 9 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து, பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
“தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை வரும் 12ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால், கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ரூ. 80 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பாசனத்திற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள்
படிப்படியாக தூர்வாரப்படும்” என தெரிவித்தார்.