’ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவின் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது’- பாலு அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பட்டானூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள் மொழி, பொதுச் செயலர் முரளி சங்கர், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என்பது உள்ளிட 37 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவானது அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இந்த நிலையில் பாமக செஇதி தொடர்பாளர் பாலு புதுச்சேரியில் ராமதாஸ் தலைமயில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல என்றும் அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது எனெவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
அதன்படியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9ஆம் நாள் மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.