மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்... பரப்புரை நிறைவு…
இந்தியாவில் நாளை மறுநாள் (ஏப். 19) முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்கிற மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத் தேர்தலில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாகவும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பகுதியளவும் தேர்தல் நடைபெறவுள்ளது.
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1): அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- அருணாச்சலப் பிரதேசம் (2): அருணாச்சலப் பிரதேசம் கிழக்கு, அருணாச்சலப் பிரதேசம் மேற்கு
- அசாம் (5): திப்ருகர், ஜோர்ஹாட், காசிரங்கா, லக்கிம்பூர், சோனித்பூர்
- பீகார் (4): அவுரங்காபாத், கயா, ஜமுய், நவாடா
- சத்தீஸ்கர் (1): பஸ்தர்
- ஜம்மு மற்றும் காஷ்மீர் (1): உதம்பூர்
- லட்சத்தீவு (1): லட்சத்தீவு
- மத்தியப் பிரதேசம் (6): சிந்த்வாரா, பாலகாட், ஜபல்பூர், மண்டலா, சித்தி, ஷாஹ்டோல்
- மகாராஷ்டிரா (5): நாக்பூர், சந்திராபூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர், ராம்டெக்
- மணிப்பூர் (2): உள் மணிப்பூர், வெளி மணிப்பூர்
- மேகாலயா (2): ஷில்லாங், துரா
- மிசோரம் (1): மிசோரம்
- நாகாலாந்து (1): நாகாலாந்து
- புதுச்சேரி (1): புதுச்சேரி
- ராஜஸ்தான்(12): கங்காநகர், பிகானேர், சுரு, ஜுன்ஜுனு, சிகார், ஜெய்ப்பூர் கிராமம், ஜெய்ப்பூர், அல்வார், பரத்பூர், கரௌலி-தோல்பூர், தௌசா, நாகௌர்
- சிக்கிம் (1): சிக்கிம்
- தமிழ்நாடு (39): திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை சென்ட்ரல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை , பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
- திரிபுரா (1): திரிபுரா மேற்கு
- உத்தரகாண்ட் (5): தெஹ்ரி கர்வால், கர்வால், அல்மோரா, நைனிடால்-உதம்சிங் நகர், ஹரித்வார்
- உத்தரப்பிரதேசம் (8): பிலிபித், சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர்
- மேற்கு வங்காளம் (3): கூச்பெஹார், அலிபுர்துவார்ஸ், ஜல்பைகுரி
இந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ளது.
அத்துடன் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நாளை மறுநாள் (ஏப். 19) நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
பிரசாரம் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம் ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.