தென்காசி முதியோர் இல்ல விவகாரம் - உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தனர். இந்த முதியோர் இல்லத்தில் கடந்த ஜுன் 11ம் தேதி இரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 40) ஆகியோர் கடந்த ஜுன் 12ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து, தனலட்சுமி (70) என்பவர் ஜுன் 13ம் தேதி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதில், இடைகால் பகுதியைச் சேர்ந்த முப்புடாதி என்ற முதியவர் கடந்த ஜுன் 17ம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையே, அந்த முதியோர் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதனிடையே மேலும் 10 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (வயது 70) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் அன்னை முதியோர் இல்லத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அன்னை முதியோர் இல்லத்தில் உள்ள குடிநீரில் ஈ-கோலை என்கின்ற பாக்டீரியாக்கள் அதிகளவில் இருந்த காரணத்தினால் சிறுநீர் தொற்று மற்றும் செரிமான கோளாறு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 6 உயர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.