தென்காசி முதியோர் இல்ல விவகாரம் - தொடரும் சோகம்!
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கி வந்தனர். பாட்டா குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்த இந்த முதியோர் இல்லத்தில் கடந்த 11ந் தேதி மாமிச உணவு போடப்பட்டது. உணவை உட்கொண்ட முதியோர்களுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வாமையால் பாதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 40) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து தனலட்சுமி (70) என்பவர் கடந்த 13ந் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இடைகால் பகுதியை சேர்ந்த முப்புடாதி என்ற முதியவரும் தற்போது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இல்லத்தில் உணவருந்திய 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.