பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மீதான தாக்குதல் : ராமதாஸ் கண்டனம்..!
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருள் அவர்கள் இன்று காலை சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் (கி) பா.ம.க ஒன்றிய செயலாளர் சத்தியராஜின் தந்தை இறப்பு செய்தியை அறிந்து வடுகதத்தம் பட்டி கிராமத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் வழியில், ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லையான மத்தூர் தரைப்பாலத்தில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் தலைமையில் அன்புமணி ஆதரவு சட்டவிரோத கும்பல் ஒன்று கத்தி, இரும்பு பைப்புகள், கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவருடன் வந்த கட்சியினரின் 5 கார்களை வழிமறித்து, "மருத்துவர் அன்புமணி வாழ்க" என்று கோஷம் எழுப்பி கொண்டு "அய்யாவுடன் சேர்ந்து கொண்டு அன்புமணி அண்ணனுக்கு எதிராகவே அரசியல் செய்கிறீர்களாடா.." என்றும் முழங்கியவரே கார் கண்ணாடிகளை அடித்து, உடைத்து, நொறுக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளை குறி வைத்து கொலை செய்ய வேண்டும் என ஜெயப்பிரகாஷ் ஒரு கல்லை தூக்கி வந்து "அன்புமணி அண்ணன் தான் உன்னை அடித்து கொலை செய்ய சொன்னார்" என்றும், இனிமேல் அன்புமணி அண்ணனை எதிர்ப்பவர்களுக்கும், அய்யாவுடன் இருக்கும் ஆட்களுக்கும் இதே கதிதான் என கூறி உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்" என்றும். கூறிக்கொண்டே கொலை செய்யும் நோக்கத்துடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் தலையில் அடிக்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை காவல்துறையை சேர்ந்தவர்கள் நேரில் பார்த்து உள்ளனர். கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளாமல், ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த இந்த தாக்குதல் நிகழ்வு கடுமையான கண்டனத்துக்குரியது. கடந்த சில நாட்களாக சேலம், அரியலூர், தர்மபுரி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் அன்புமணி அவர்கள் பலரை தூண்டிவிட்டு என்னையும், என்னுடன் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்களையும் அவமானப்படுத்தும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வன்முறையை தூண்டி விட்டு மோதல் போக்கை உருவாக்கி வருகிறார்.
வன்முறையை தூண்டுபவர்களை அன்புமணி அவர்கள் உற்சாகப்படுத்தி, பாராட்டி பொறுப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் அன்புமணியின் தூண்டுதலின் பேரில் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. அதில் சிலர் கடுமையாக தாக்கப்பட்டும் வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினரான அருள் மீதான இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர்களாக செயல்பட்ட அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் சுதந்திரமாக மக்கள் பணி செய்வதற்கும் ஏதுவாக அவருக்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய குழு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.
அன்புமணியே திட்டமிட்டு, அத்துடன், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இம்மாதிரியான, மோசமான சம்பவங்கள் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் தூண்டுதலை செய்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். இவ்வாறு திட்டமிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமாக, என்னுடன் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை தாக்க வேண்டும் என்று சதி திட்டத்தோடு செயல்படும் அன்புமணியின் கும்பலை தடை செய்து, அந்த சட்ட விரோத கும்பலில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.