”ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”- மதுரை எம்.பி சு. வெங்கடேசன்!
தெற்கு ரயில்வே நடத்திய இளநிலை பொறியாளர் தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
01:57 PM Aug 16, 2025 IST | Web Editor
Advertisement
தெற்கு ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வினாத்தாள் தரப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
”ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். ஒன்றிய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்”
என்று தெரிவித்துள்ளார்.
Advertisement