மக்களின் மனதில் இடம் பிடித்த பாரத ஸ்டேட் வங்கி - வாடிக்கையாளருக்கு ஒரு கோடி ரூபாய் விபத்து காப்பீடு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமிக்கு, அவரது கணவரின் விபத்து காப்பீட்டுத் தொகையான 1 கோடி ரூபாய்க்கான காசோலையை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழங்கியுள்ளது.
முத்துலட்சுமியின் கணவர் உசிலம்பட்டி SBI கிளையில் ஊதியக் கணக்கு வைத்திருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தார். வங்கி நிர்வாகமே முன்முயற்சி எடுத்து, எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் இந்தக் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தந்து, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்தத் தொகையை, வங்கியின் கிளை மேலாளர் மகேஸ்வரி, முத்துலட்சுமியிடம் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், அரசு ஊழியர்கள் SBI வங்கியில் ஊதியக் கணக்கு வைத்திருந்தால், 1 கோடி ரூபாய் விபத்து காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.
மேலும், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்கள் வருடத்திற்கு 2,000 ரூபாய் செலுத்தினால், விபத்து காப்பீடாக 40 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். இந்தக் காப்பீட்டுத் தொகையை எந்தவிதச் செலவும் இன்றி வங்கி நிர்வாகமே பெற்றுத் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், வங்கிகள் வெறும் நிதி பரிவர்த்தனைகளுக்கான இடமாக மட்டும் இல்லாமல், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இக்கட்டான சூழலில் உறுதுணையாக நிற்கின்றன என்பதைக் காட்டுவதாக அமைந்தது. இது வங்கி மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.