லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
இங்கிலாந்து சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் அம்பேத்கர் லண்டனில் படிக்கும்பொழுது தங்கியிருந்த இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"லண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) படிக்கும்பொழுது, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் தங்கியிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்த இல்லத்தின் அறைகளின் வழியே நடந்து செல்லும்போது, ஆழ்ந்த பிரமிப்பு உணர்வை நான் உணர்ந்தேன்.
ஒரு காலத்தில் இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், தனது அறிவால் வளர்ந்து, இலண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார். குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது. உணர்வெழுச்சி மிகுந்த இப்படியொரு தருணத்தை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். ஜெய் பீம்”
என்று தெரிவித்துள்ளார்.