SRHvsDC | கனமழையால் போட்டி ரத்து - பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது ஹைதராபாத் அணி!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் ஹைதராபாத்-டெல்லி அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர் கருண் நாயர் டக் அவுட்டாக அவரைத் தொடர்ந்து ஃபாஃப் டு பிளெசிஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவருக்கடுத்து வந்த அபிஷேக் போரெல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கே.எல். ராகுல் 10 ரன்கள் அடித்து தனது விக்கட்டை பறிகொடுத்தார்.
அதன் பின்பு வந்த கேப்டன் அக்சர் படேலும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 41 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு எதிராக குறைந்த பட்ச இலக்கை தேற்றினர்.
அதன்படி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 134 என்ற இலக்கை ஹைதராபாத் அணி சேஸிங் செய்ய இருந்தது. அப்போது இன்னிங்ஸ் இடைவேளையின்போது கனமழை பெய்ததால் காரணமாக ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து மழை நின்ற பின் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் ஆட்டத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்த முடிவால் ஐதரபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. தற்போது ஹைதராபாத் 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திலும், டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.