For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் - செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
01:37 PM Sep 01, 2025 IST | Web Editor
காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்  ஜனநாயகத்தை சிதைக்கும் செயல்   செல்வப்பெருந்தகை
Advertisement

Advertisement

இந்தியாவின் ஜனநாயகம் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். "சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்" (SIR) என்ற பெயரில் ஒன்றிய அரசு, தனக்கு வாக்களிக்காத மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவை?

தேர்தல் என்பது மக்களின் உரிமை, அதிகாரம் மற்றும் அவர்களின் குரலை வெளிப்படுத்தும் களம். ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார். "தன்னாட்சி பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் ஆணையமே தன் கடமையை மறந்து பாஜக அரசின் நாசக் கருவியாக மாறியிருப்பது நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரிய அவமானம்" என்று அவர் தனது X தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி இதுவரை 89 லட்சம் புகார்களை அனுப்பியும், தேர்தல் ஆணையம் அவற்றை நிராகரித்துவிட்டு பாஜகவின் சதிக்குத் துணை நிற்பதாக அவர் கடுமையாகச் சாடினார். மக்கள் வாக்குரிமை பறிக்கப்படுவது ஒரு சாதாரண தவறு அல்ல, அது ஜனநாயகத்தை சிதைக்கும் கொடூர குற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் வாக்குறுதி

மக்கள் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் உரையாற்றும்போது, "பல பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பிரதமரை வாக்குத் திருடன் என்று சொல்ல வேண்டாம் என என்னிடம் வற்புறுத்தினார்கள்" என்று வெளிப்படையாகத் தெரிவித்ததை செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டினார். "உண்மையை மறைக்க முடியாது. வாக்குத் திருடனை வாக்குத் திருடன் என்றே தான் அழைக்க வேண்டும். அந்தச் சொல் எரிச்சலை ஏற்படுத்தினாலும், அது மக்களின் குரல், அது ஜனநாயகத்தின் உண்மை" என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எச்சரிக்கை

இந்த அநீதி இனிமேலும் சகிக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் பாஜகவின் பொம்மையாய் செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், முறைகேடாக நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"இல்லையெனில் இந்த ஜனநாயகக் கொலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தெருக்களில் இறங்கி குரல் கொடுத்து, போராடி, பாசிச பாஜக அரசையும் அதன் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தையும் மக்கள் முன் வெளிச்சம் போட்டு நிறுத்தும்," என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மீதான இந்த அராஜகம் எரிமலை போல எரிந்தெழுந்து எதிர்ப்புப் புயலாக மாறும் என்றும், மக்களின் உரிமைக்காக காங்கிரஸ் கட்சி கடைசி மூச்சு வரை போராடும் என்றும் அவர் தனது பதிவை முடித்திருந்தார்.

Tags :
Advertisement