காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.
இந்தியாவில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வென்றெடுத்துள்ளது. நாளை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காலையிலிருந்து நடந்து வரும் காங்கிரஸ் எம்பிகள் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராகவும் சோனியா காந்தியே பொறுப்பு வகிப்பார் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவருக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படும்.