"மறக்கமுடியாத சில தருணங்கள்..." - கிப்லி ட்ரெண்டில் இணைந்த இபிஎஸ்!
கடந்த சில தினங்களாக Ghibli-style படங்கள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ChatGPTயில் புது வரவாக வந்திருக்கும் இந்த AI-generated animation படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்துள்ளது. ஒரு பக்கம் இது மிகப்பெரிய அளவில் பரவி வந்தாலும், இன்னொரு பக்கம் வலுவான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. கலை வடிவத்தை, செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமிக்கிறது என்ற அச்சம் அதில் பிரதானமாக இருக்கிறது.
சமீபத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், தனது புகைப்படத்தை அனிமேஷனமாக மாற்றி அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் படங்கள் அனிமேஷனமாக மாற்றப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டன. தொடர்ந்து, பலரும் புகைப்படங்களை அனிமேஷன்களாக மாற்றி அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் கிப்லி ட்ரெண்டில் இணைந்துள்ளார். அவர் முதலமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு சில தருணங்களின் புகைப்படங்களை அனிமேஷன்களாக மாற்றி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதனுடன், "தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோகிப்லி உலகம் வரை - எனது மறக்கமுடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.