சிவகங்கை | கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரம் - அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த மல்லாங்கோட்டை அருகே மெகா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் கடந்த 20ம் தேதி வேலை செய்து கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய மற்ற மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணையில், உயிரிழந்தவர்கள் அர்ஜித், ஆண்டிச்சாமி, கணேஷ், ஆறுமுகம், முருகானந்தம், என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்த மைக்கேல் என்ற தொழிலாளர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து அந்த கல்குவாரியின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அச்சமயம் சிங்கம்புணரி தாலுகாவில் தாசில்தாராக பணிபுரிந்த பரிமளம் என்வர் நில எடுப்பு பிரிவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கனிமவள பிரிவு வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ) இருந்த வினோத்குமார் மற்றும் மல்லாகோட்டை வி.ஏ.ஒ பாலமுருகன் ஆகிய இருவரையும் பணிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். கனிமவள பிரிவு வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ) இருந்த வினோத்குமார் மானாமதுரை துனை வட்டாட்சியராக பதவி வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.