"சீமான் வாய்க்கு வந்தபடி பேசுவார்" - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!
அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 10.15 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இலை வளைகோல் பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். முதல் நாள் பேசுவதை மறுநாள் மறுத்து பேசுகிறார். அடுத்த நாள் ஒரு புது கதையை அவரே பேசுகிறார், தான் பேசியதையே வேறு கண், காது, மூக்கு வைத்து பேசுவதாக அவரே கூறுகிறார்.
அவரது ஒவ்வொரு நாளின் வீடியோவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் எந்த அளவுக்கு விரக்தியில் உள்ளார் என்பது தெரியும். அவர் புதிய கூட்டணி அமையும் என்று பார்த்தால் அமையவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வலுவாக உள்ளதை பார்த்து தான் எல்லோரையும் விமர்சிக்கிறார். அவர் நினைத்தது நடக்கவில்லை, எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் விரக்தியின் விளிம்பிலிருந்து பேசுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஆடு மாடுகளின் பொதுக்கூட்டம் குறித்து கேட்டபோது, எதிரே உள்ள மக்களையே மனிதர்களாக நினைத்து பேச மாட்டார், வாய்க்கு வந்தபடி பேசுவார், அதன் உச்சமாக உண்மை நிலையை வெளிப்படுத்துகின்ற வகையில், இந்த காட்சியை பார்க்கும்போது தமிழ்நாட்டு மக்கள் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய கடைசி கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.