“பாதுகாப்பு தோல்வி” - பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயரம் தொடர்பாக காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!
பல வருட போராட்டத்திற்கு பிறகு, நேற்று(ஜூன்.03) பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதை நேற்றிரவு முதல் அந்த அணியின் ரசிகர்கள் பட்டாசு மற்றும் மேலதாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பதால், பொது இடத்தில் முன்னதாக வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட பெங்களூர் அணி தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது, இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்க இன்று 5 மணியளவில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து பேரணியின்போது ஏராளமான பெங்களூர் அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குவியத் தொடங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதுவரை பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் பெரும் அசம்பாவிதத்தை தவிக்கவும் பெங்களூர் அணி ரசிகர்கள் மீது கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
காங்கிரஸ் தரப்பு மன்னிப்பு;-
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பெங்களூரு அணியின் வெற்றி விழாவில் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் பெங்களூரு மற்றும் கர்நாடக மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விதான் சவுதாவிலிருந்து அணிவகுப்பு நடத்த விரும்பினோம், ஆனால் கூட்டம் இந்த அளவுக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.
பாஜக தரப்பு குற்றச்சாட்டு;-
இந்த நிலையில் நடந்த துயரச் சம்பவத்திற்கு காங்கிரஸ் அரசை பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. சலவாடி நாராயணசாமி செய்தியாளர்களிடம், “; சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த துயர சம்பவம் அரசாங்கத்தால் நடந்தது. எத்தனை பேர் வருவார்கள், என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு(காங்கிரஸ்) எதுவும் தெரியாது. இது ஒரு பாதுகாப்பு தோல்வி” என்று குற்றம் சாட்டியுள்ளார்.