“அறிவாலய இடமாற்றம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்” - ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தூர், பசுக்காரன்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் விக்கிரமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,
“மதுரையை சுற்றி பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரையின் வளர்ச்சியை சுற்றி பார்க்கவில்லை. அவ்வாறு சுற்றி பார்த்திருந்தால் மெட்ரோ கிடைத்திருக்கும், விமான நிலையத்தின் சுரங்கபாதை கிடைத்திருக்கும், மேம்பாலங்கள் விரைவாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும், கூட்டு குடிநீர் திட்டங்கள் கிடைத்திருக்கும். எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள். அதனால் அவற்றின் பணிகள் இன்று ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றன, சில திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது.
விமான ஓடுதளம், சுரங்கப்பாதைக்கு மத்திய அரசு அனுமதியை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொடுத்தார். இப்போது உள்ள முதலமைச்சர் அதை கிடப்பில் போட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்று வளர்ச்சி குறித்து சுற்றி பார்த்து இருந்தால் மதுரை மக்களுக்கு ஏதாவது வளர்ச்சி கிடைத்திருக்கும்.
ஆனால் ஒன்றே ஒன்று செய்திருக்கிறார்கள். சென்னையில் இருந்த அண்ணா அறிவாலயத்தை மதுரைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இந்த இடமாற்றம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவின் ஆட்சியை மலர செய்வார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
செல்லம்பட்டி பகுதியில் விளைந்த நெல்மணிகள் மழை வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. நிவாரணம் வழங்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். விளைந்த பயிர்களை நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும், தனியாருக்கு கொடுப்பதால் 400 முதல் 600 வரை நஷ்டம் வருகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். அவ்வாறு கோரிக்கை வைக்கும் போது அப்போது இருந்த முதலமைச்சர் செவி சாய்த்து கொள்முதல் நிலையம் அமைத்து கொடுத்தார். இப்போது இங்கு வந்துள்ள முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியவில்லை, அவர் ரோடு ஷோ என ஷோ காட்டுகிறார். பிரதான எதிர்கட்சி நாங்கள் சொல்கிறோம், தாலியை அடகு வைத்து விவசாயம் செய்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டமும் போய்விட்டது. தாலியும் போய்விட்டது இந்த அரசாங்கத்தில். ஆகவே அறிவாலயம் இடமாற்றம் தான் இந்த பொதுக்குழுவின் சாதனையாக உள்ளது” எனப் பேசினார்.