டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா!
அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைக்கிறது.
டெல்லியின் புதிய முதலமைச்சரை அறிவிப்பதற்கான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெல்லி ஷாலிமார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து ரேகா குப்தா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரேகா குப்தா. இந்நிலையில் இன்று டெல்லி முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா. ரேகா குப்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர்கள், பொறுப்பு முதலமைச்சர் அதிஷி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதலமைச்சர் என்கிற பெருமையையும் ரேகா குப்தா பெறுகிறார்.