டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு!
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்கள் மட்டுமே பெற்றது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் அர்விர்ந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் தோல்வி அடைந்தார்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு தீவிரம் அடைந்தது. டெல்லி முதலமைச்சராக பர்வேஷ் வர்மா, விஜேந்தர் குப்தா, ரேகா குப்தா உள்ளிட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.
டெல்லியின் புதிய முதலமைச்சரை அறிவிப்பதற்கான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மேலிடம் முதலமைச்சரை தேர்வு செய்த நிலையில், முறைப்படி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, முதலமைச்சர் மற்றும் 6 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர். ரேகா குப்தா டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும் முன்பு இருந்துள்ளார்.