“சீர்திருத்தமே பாஜகவின் தாரக மந்திரம்" - பிரதமர் நரேந்திர மோடி உரை!
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை பாஜக அரசு எடுத்துள்ளதாகவும், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் கொண்டதாக கடந்த 5 ஆண்டுகளில் நாடு இருந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,
“கடந்த 5 ஆண்டுகள் இந்திய நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. 17வது மக்களவை கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிகவும் கடிமான காலகட்டத்தை சபாநாயகர் சிறப்பாக வழி நடத்தியுள்ளார். கொரோனா காலத்திலும் நம் நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை. உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம்.
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருமாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி முதலில் சிலருக்கு சிரமமாக இருந்தாலும், பிறகு அனைவருக்கும் பயனுள்ளதாக மாறியுள்ளது. மக்களவையில் தங்களது பங்களிப்பை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் கொண்டதாக கடந்த 5 ஆண்டுகளில் நாடு இருந்துள்ளது. நடப்பு 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு சவாலானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உலகளவில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. ஜி20 மாநாட்டை நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா. 100% முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்ற உறுதி ஏற்போம். 17வது மக்களவை 97சதவீதம் செயல்பட்டது. இதனை 100 சதவீதமாக செயல்படுத்த வேண்டும்” இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.