பாகிஸ்தானியர்கள் வெளியேற்ற விவகாரத்தில் மறுபரிசீலனை தேவை - மெஹபூபா முஃப்தி!
இந்தியர்களை மணந்து, 30-40 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“அனைத்து பாகிஸ்தானியர்களையும், குறிப்பாக ஜம்மு - காஷ்மீரில் உள்ளவர்களை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்ற சமீபத்திய உத்தரவு மனிதாபிமான கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த உத்தரவால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து, இந்திய குடிமகன்களை மணந்து, குடும்பங்களை வளர்த்து, நீண்ட காலமாக நமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பெண்களே ஆவர்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து கருணையுடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்ளுமாறும் அரசை வலியுறுத்துகிறோம். பல தசாப்தங்களாக இந்தியாவில் அமைதியாக வாழ்ந்த நபர்களை நாடு கடத்துவது என்பது மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல், வேறு வீடு இல்லாதவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துயரத்தை அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீரில் கடந்த 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக இங்கிருந்த வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் பலறும் தங்கள் உறவுகளை பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.