ராமேஸ்வரம் | போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவர். இதனை நிறுத்த அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இச்சம்பம் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில், கடந்த வாரம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 42 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களின் 8 மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் மீனவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 3வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, இலங்கை அரசு சிறைபிடித்துள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், மத்திய அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதியளித்தார்.
ஆளுநரின் ராமேஸ்வரம் பயணம் ஏன்?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருந்தார். அப்போது, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகம் அமைக்க நிதி உதவி தர வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமது சொந்த நிதியில் ரூ.50 லட்சத்தை வழங்கினார். இன்று அந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.