மாநிலங்களவை தேர்தல் | திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளில், 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். அதன்பின் கடந்த இரு தினங்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இன்று (ஜுன் 6) திமுக, அதிமுக சார்பில் போட்யிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா மற்றும் சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக வேட்பாளர்களான தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.